Tuesday, May 7, 2013

எதுவும் சாத்தியமே!

எதுவும் சாத்தியமே!

( சிவகாசி சுப்புராஜ் )
 



இயற்கையில் இரவும் பகலும் எப்படியோ அப்படியே மனித வாழ்வில் வெற்றியும் தோல்வியும் சகஜம்தான். இரண்டையும் நேசிக்க பழகிக்கொள்வதே நல்ல அனுபவம் என்று கருதப்படுகிறது. வெற்றிகளிலிருந்து நாம் கற்றுக்கொள்வது குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், தோல்விகளிலிருந்தும் தவறுகளிலிருந்தும் நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்றால் அதனை மறுக்க இயலாது. நாம் வெற்றியையும் தோல்வியையும் ஒன்றுபோல் நினைக்க வேண்டும். அப்போதுதான், இரண்டுமே நம்மையே ஏமாற்றி அருகிலும் வரும், விலகியும் செல்லும். மோசமான தோல்விகளையைச் சந்திக்கும் துணிவு கொண்டவர்களால்தான் பெரும் சாதனைகளை நிகழ்த்த முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே ஆகும். ‘வெற்றி வேண்டுமா போட்டுப் பாருடா எதிர் நீச்சல்’ என்ற பாடல் வரிகள், நாம் வெற்றி பெற வேண்டுமானால் தோல்வி என்னும் கடலில் எதிர் நீச்சல் போட வேண்டும் என தெள்ளத் தெளிவாகவும் நாசூக்காகவும் எடுத்துரைக்கின்றது.

வெற்றி என்னும் மூன்றெழுத்தை விரும்பாதவர்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வெற்றி என்னும் வைரம் எப்போதும் நம்முடன் இருக்க வேண்டும் என்று நாம் விரும்புவோம். வெற்றி என்பது தற்செயலாக நிகழ்வதில்லை. இது நமது மனப்பாங்கின் விளைவே ஆகும். நமது மனப்பாங்கே நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் ஒன்றாகும். வெற்றி என்பதே குறிக்கோளை அடைவதே என பொருள்படும். குறிக்கோள் இல்லாமல் இருந்தால் நிச்சயமாக வெற்றி என்பதே கிடையாது. குறிக்கோள் இல்லாதவரின் வாழ்க்கை, நடுக்காட்டில் வழி தெரியாமல் தவிக்கும் குருடரின் வாழ்க்கையைப் போன்றது என்கிறார்கள். பேருந்தில் பயணம் செய்யும்போது எந்தப் பேருந்து? எங்கே செல்கிறது? பேருந்தில் ஏறினால் நாம் போய் சேரக்கூடிய இடத்தை அடைய முடியும் என்று எண்ணிதான் செயல்படுகின்றோம். இதிலும் முக்கியமான ஒன்று, எந்த இடத்திற்குப் போகப் போகிறோம் என்ற குறிக்கோள் இல்லையென்றால் நாம் அந்த இடத்திற்குப் போய் சேர முடியாது. அதே போலத்தான் நாம் எந்த ஒரு முயற்சியில் ஈடுப்பட்டாலும், ஒரு குறிக்கோளுடன் செயல்பட வேண்டும்.


வெற்றி என்பது வாழ்வில் நாம் எவ்வளவு உயர்ந்திருக்கிறோம் என்பதைக் கொண்டு அளக்கப்படுவதில்லை என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் விழும் போது எத்தனை முறை மீண்டும் உடனே எழுந்து நின்றிருக்கிறோம் என்பதைக் கொண்டே அளக்கப்படுவதுதான் வெற்றியாகும். மீண்டும் மீண்டும் எழும் இந்தத் திறமையே வெற்றியைத் தீர்மானிக்கின்றது. ‘வீழ்வதே மீண்டும் எழுவதற்குத்தானே’ என்ற அற்புதமான வரிகள் நம் மனதில் பசுமரத்தாணி போலப் பதிய வேண்டும். இங்கு, விழுவது என்பது தோல்வி என்றும் எழுவது என்பது வெற்றி என்றும் பொருள்படுகின்றது. இதனை உணர்ந்தே, ‘ஒரு மனிதனின் வெற்றி, அவனது தோல்விகளில்தான் நிர்ணயிக்கப்படுகின்றதாம். ஏனெனில், அவன் கீழே விழுகிற ஒவ்வொரு முறையும், வேகமாய் முன்னேறுகிறான்’ என்று அழுத்தத் திருத்தமாய்ச் சொல்கிறார் ரால்ஃப் வால்டோ எமர்சன் என்கிற ஓர் அறிஞர். விழும் ஒவ்வொரு முறையும் எழுவதில்தான் நம் சிறப்பு வெளிப்படுமே தவிர, விழுவதில் இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தோல்வி என்பது கடுமையானதுதான். ஆனால், வெற்றி பெறுவதற்காக முயற்சி செய்யாமல் இருப்பதுதான் அதைவிட மோசமானதாகக் கருதப்படுகிறது.


நெஞ்சிலே துணிவில்லாதவனுக்குத், தோல்விகளெல்லாம் தடைக்கற்கள். துணிவுள்ளவனுக்கோ, தடைக்கற்கள்கூட அவனைத் தூக்கி நிறுத்துகின்ற படிக்கற்கள்தான் என கூறினால் அது மிகையாகாது. தோல்வி என்பது நம்மோடு நிரந்தர வாசம் புரிய வருகிற ஒன்றல்ல. அது சில சமயங்களில், சில சந்தர்ப்பங்களில், சில இடங்களில் நம்மைத் தொட்டு விடுகிறது. அதனால்தான், இக்கூற்றினை வெற்றிகளை வரவில் வைத்துக் கொள்வதற்கான எத்தனையோ சந்தர்ப்பங்கள், நம்மை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கின்றன என்பதுதான் அதன் பொருள் எனப்படுகிறது. எல்லாத் துறைகளிலும் முழுமைப் பெற்றவனாக, வெற்றி அடைந்தவனாக, எந்தவொரு மனிதனையும் நாம் இனம் காட்டுதல் இயலாது. ஒன்றில் கொடி கட்டிப் பறக்கிறவன், இன்னொன்றில் குப்புற விழுந்து மண்ணைக் கவ்வுகின்றான். ஆக, இப்படி வெற்றியும் தோல்வியும் சராசரி மனிதனின் வாழ்க்கையில் வந்து போகிற சாதாரண சங்கதிகளே என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றையே எண்ணி எண்ணி மனச்சோர்வு காணக்கூடாது. எனவே, இனியாவது புரிந்து கொள்ளுங்கள் வெற்றியின் திரைமறைவில் தோல்விகளும் நம்மைத் தொடரலாம்! தோல்விகளைப் படிக்கற்கற்களாக்கிக் கொண்டால் வெற்றியின் விளிம்பையும் நாம் எட்டிவிடலாம். இதனால்தான், தோல்வியே வெற்றியின் முதற்படி என்ற பழமொழியைக் கூறுகின்றனர். இப்பழமொழி பொய்யல்ல, ஒவ்வொருவரும் உணர வேண்டிய உண்மை என்றால் அது மிகையாகாது. வெற்றி பெற்றவர்கள் அப்படியிலே அமர்ந்து விடுவார்கள். ஆனால், தோல்வி அடைந்தவர்கள்தான் மீண்டும் மீண்டும் முயன்று கொண்டே இருப்பார்கள்.


எந்தத் தோல்வியும் நிரந்தரமில்லை என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு கதவு மூடினால், அடுத்த கதவைத் திறக்க முயல வேண்டும். தோல்வி என்பது வாழ்வின் ஓர் அங்கம் என்பது அனைவருக்கும் தெரியும். அதிலிருந்து பல அனுபவ பாடங்களைப் படிக்க முடியும் என்பதை நாம் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும். தோல்வியின் சுவையினை நாம் அனுபவித்து அறிந்திருந்தால் ‘இனியொருமுறை தோற்கக்கூடாது’ என்கிற மனப்பக்குவம் நமக்குள் வந்து விடும். தோல்வியே வெற்றிக்கான நெடும் பாதையாகும். டாம் வாட்சன் சீனியர் என்பவர், “நீங்கள் வெற்றி பெற விரும்பினால், உங்களுடைய தோல்வியின் சதவீதத்தை இரண்டு மடங்கு ஆக்குங்கள்” என்று கூறியிருக்கின்றார். அவரின் கூற்றானது முற்றிலும் உண்மையே என்று கூறினால், அதுவே உண்மையாகும்.


தோல்வியின்றி வராலாறு படைக்க இயலுமா? நாம் வரலாற்றைப் படிக்கையில், எல்லா வெற்றிக் கதைகளுமே பெரிய தோல்விகளின் கதைகள் என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்வோம். ஒரே வித்தியாசம் என்னவென்றால், ஒவ்வொரு முறை அவர்கள் தோல்வி அடையும் போதும், அவர்கள் மீண்டும் எழுகின்றார்கள். இதைப் பின்னடைவு தரும் தோல்வி என்று சொல்வதை விட முன்னேற்றம் தரும் தோல்வி என்று சொல்லலாம். ஆனால், பலரும் வெற்றியின் தாரக மந்திரம் தோல்விதான் என்பதை உணர்வதும் இல்லை, ஏற்றுக் கொள்வதும் இல்லை. மானிடர்களின் இந்த அறியாமை நீங்கும் காலம் எப்போது வருமோ என்று வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். வெற்றி என்பது நாம் சாதிக்கும் விஷயங்களில் இல்லை; சாதிப்பதிலேயே இருக்கின்றது.

தோல்விக்குப் பயந்து சிலர் எப்போதும் முயற்சி செய்வதே இல்லை. அதே சமயம், அவர்கள் இருக்கும் இடத்திலேயே இருக்கவும் விரும்பமாட்டார்கள். சாதிக்க விரும்பும் மனிதன் தோல்விகளைப் பற்றியோ எதிர்ப்புகளைப் பற்றியோ, எதிரிகளைப் பற்றியோ, வறுமையைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டு ஒரே இடத்தில் நின்று காலத்தை வீணாக்கமாட்டான். எப்படி இதை எதிர்கொள்வது என்று செயல்பட ஏற்ற வழி எதுவோ அதைத் தேர்ந்தெடுத்து முடிக்க நடை போட ஆரம்பித்து விடுவார்கள். ‘தன்னம்பிக்கை உள்ளவனுக்கு எல்லா வாசல்களும் திறந்து வரவேற்பு கொடுக்கும்!’ என்கிறார் எமர்சன்.


நாம் சரியான மனப்பாங்கு உள்ளவராக இருந்தால், தோல்வியை ஓர் ஆசிரியராகத்தான் கருதுவோம். ஆசிரியர் என்பவர், நாம் ஒன்றைப் பற்றி தெள்ளத் தெளிவாகவும், ஆழமாகவும் கற்றுக் கொள்வதற்கு எவ்வாறு துணைபுரிகிறாரோ, அவ்வாறே இந்தத் தோல்வியும் வெற்றி என்னும் சிகரத்தை அடைவதற்கான நேர் பாதையை நன்றாக தெரிந்து கொள்ளத் துணை புரிகின்றது. தோல்வி அடையும் போது நாம் ஏமாற்றமடையலாம். ஆனால், முயற்சி செய்யாமலேயே இருந்து விட்டால், முற்றிலும் அழிந்துபோக நேரிடலாம். எனவேதான், தோல்வியிலிருந்து ஆதாயமடைவதே வெற்றியின் திறவுகோல் என்றும் கூறுகின்றனர். ஒவ்வொரு தோல்வியும் நமக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஒரு பள்ளிக்கூடம், ஒரு பாடநூல், ஒரு ஆய்வுக்கூடம், ஒரு அனுபவம் என பலவாறு கூறுகின்றனர். அதனால்தான், தோல்வியை ஆசிரியருக்கு ஒப்பிட்டுள்ளேன். தோல்வி என்பது ஒரு சுற்றுப் பாதையே தவிர அதுவே முடிவாகாது. இது ஒரு தாமதமே தவிர பேரிடியில்லை என்பதை முதலில் நாம் மனதில் ஆழமாக பதிய செய்ய வேண்டும். அப்போதுதான், தோல்வியைக் கண்டு பயப்படாமல் அதனை துச்சமாக எண்ணி வெற்றியின் இலக்கை நோக்கிப் பீடுநடைப் போடுவோம்.நாம் பெற்ற அனுபவத்திலிருந்துதான் ஒன்றைப் பற்றி நாம் கற்றுக்கொள்வோம். எனவே, நாம் செய்த தவறுகளுக்கு அனுபவம் என்ற பெயர் பொருந்தும் என்றால் அது மிகையாகாது.

வெற்றி பெற வேண்டும் என்றுதான் ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள், அப்படி விரும்பினால் மட்டும் போதுமா..? எதிர்படும் தோல்வியைப் புறமுதுகு காட்டாமல் எதிர்கொள்ள வேண்டும். ‘தோல்வியைக் கண்டு பயந்துவிடாதே’, என்ற பாடல் வரியை நாம் அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டே இருந்தால், தோல்வி எனும் மூன்றெழுத்தின் பயம் சூரியனைக் கண்ட பனிப்போல மறைந்துவிடும். தோல்வி பற்றிய பயம் பல சமயம் தோல்வியை விட மோசமாக இருக்கலாம். ஆனால், நாம் அதனைக் கண்டு ஒரு போதும் துவண்டு விடக்கூடாது. தோல்வியைக் கண்டு துவண்டு போவதால் ஒரு பயனுமில்லை. அதை நேருக்கு நேர் எதிர்கொண்டு, எந்தத் தோல்வியும் என்னை தடுத்துவிட முடியாது என்றும் அதை நான் அனுமதித்தால் மட்டுமே என்னை அது முடக்க முடியும் என்று உறுதி கொள்வபர்களே வெற்றியாளர்கள். தோல்விகள் கொடுத்த பாடங்களிலிருந்து புதிய வெற்றிக்கான அடித்தளம் அமைக்க வேண்டும். தோல்வி என்பது நம் வாழ்வில் நடக்கும் ஒரு பயங்கர நிகழ்ச்சியில்லை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். தோல்விகள் நம்மைத் துன்புறுத்தும் போது அந்த எண்ணத்தை விரட்டி அடிக்க நாம் முன்பு அடைந்த சிறு சிறு வெற்றிகளை நினைத்து மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.

“ஒவ்வொரு தோல்வியும் ஓர் அனுபவம்,
ஒவ்வொரு இழப்பும் ஒரு லாபம்,
ஒவ்வொரு நட்டமும் ஒரு பட்டறிவு,
ஒவ்வொரு காணமல் போதலும் ஒரு தேடல்”,

என்று தோல்வியை வெற்றியாக மாற்றும் மந்திரத்தைச் சொல்கிறார் நம் வெ.இறையன்பு.


முயற்சியில் வெல்ல வேண்டும், எடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்று நாம் விரும்பினால் ‘இயலும்’ என எண்ணித் துணிந்தால் தான் உண்டு. இல்லையேல் தோல்வியும் துயரமும்தான் நம் முயற்சிகள் அனைத்தையும் பின் தொடர்ந்து கொண்டு இருக்கும். இயலாது என்பது முட்டாள்களின் வாதம். எனவே என்னால் இது இயலாது, எனக்கு அது தெரியாது, இது தெரியாது என்று சொல்லாதே ‘முயற்சி செய்து பழகிக்கொள்’ என்கிறார் நம் புரட்சிக்கவி பாரதியார். எனவேதான், ‘வெற்றியில் ஆசை வை’ என்கிறார் அறிஞர் அப்துல் ரஹீம். என்னால் இயலாது என எண்ணிக் கொண்டிருப்பவன் ஒருமுறை தோல்வியுற்ற பின், ‘இயலாது’ எனும் பயனற்ற மந்திரத்தைத் தன் மனதில் பதித்துக் கொண்டு மீண்டும் முயல முற்படமாட்டான். அம்மந்திரத்தைக் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு, வெற்றி கிட்டும் வரை நாம் கண்டிப்பாக முயல வேண்டும் என்று மன உறுதியுடன் போராட வேண்டும்.

நமக்குள் இருக்கும் தோல்வி மனப்பான்மையை எடுத்து வெளியே வீசிவிட்டு அந்த இடத்தில் வெற்றி மனப்பான்மையை நிரப்ப வேண்டும். சிறு குழந்தையைப் பார்த்தோமானால், அது நடைப்பழகக் கற்றுக்கொள்ளும் போது, விழுந்து கொண்டே இருக்கும். ஆனால், அக்குழந்தைக்கு அது தோல்வியல்ல. ஆகையால், விழுந்ததும் மீண்டும் எழுந்து கொள்கின்றது. பல முறை விழுந்திருந்தாலும் நன்றாக நடக்க கற்றுக்கொண்ட பின் அதன் முகத்தில் ஒரு மகிழ்ச்சி தெரியும். குழந்தை மட்டும் மனச்சோர்வு அடைந்து முயற்சியைக் கைவிட்டு விட்டால், அதனால் ஒரு போதும் நடக்க இயலாது. பயத்துடன் மண்டியிட்டு வாழ்வதைவிட, துணிவுடன் நின்று கொண்டு சாவதே மேல். கீழே விழுந்து விட்டீர்களா.. பரவாயில்லை. அதற்காக வருத்தமோ வெட்கமோ கொள்ளாதீர்கள். அடுத்து அடியெடுத்து வைக்க அந்த அனுபவத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு நீங்கள், தோல்வி என்னும் தூசியை தட்டி விட்டு புறப்படுங்கள். சிறு குழந்தையே பல முறை விழுந்து மீண்டும் எழுந்து நடக்கும் போது நம்மால் முடியாத என்ன? நீங்கள் மேற்கொள்ளும் வேலையில், தொழிலில் தோல்வி ஏற்பட்டால் அதைவிட்டு நகர்ந்து விடாதீர்கள். எப்போதும் தோல்வி என்பது மீண்டும் ஒரு முயற்சியை இன்னும் திறமையுடன் தொடங்குவதற்கு வழங்கப்படும் வாய்ப்பாகும். எனவே, தோல்விக்கான காரணத்தை அறிந்து கொண்டு அதைத் திருத்திக் கொண்டு அடுத்த முயற்சி செய்ய என்றுமே கற்றுக் கொள்ள வேண்டும். “நான் சிறுவனாக இருந்தபோது, நான் செய்த பத்து முயற்சிகளில் ஒன்பது முயற்சிகள் தோல்வியில் முடியும். நான் அந்த தோல்வியைத் தவிர்ப்பதற்காக என்னுடைய உழைப்பைப் பெருக்கி, என் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியைக் கைப்பற்றி வந்தேன்” என்கிறார் நாடக மேதை பெர்னாட்ஷா. இவரின் கூற்றை நாம் சற்று உற்று நோக்கினாலே நமக்கு தோல்வியிலிருந்துதான் பல அரிய கருத்துகளைக் கற்றுக்கொண்டு முயற்சி அடைய முடியும் என்ற உண்மை நன்குப் புலப்படும்.

தோல்வி இன்றி வரலாறா? தாமஸ் ஆல்வா எடிசனை விடவா நீ தோற்கப் போகிறாய்? நெப்போலியன் மூன்றில் இரண்டு பங்கு போரில் தோற்றவர்தான். பதினாறு முறை வாழ்க்கையில் தோல்வி கண்டவர்தான் ஆபிரகாம் லிங்கன். பதினேழு முறை தோற்று வெற்றி கண்டவர்தான் கஜினி முகமது. பலமுறை முயன்று தோல்வியுற்றுதான் அச்சிறு உருவத்தைக் கொண்ட சிலந்தியே வலை பின்னுகிறது. நான் இதுவரை குறிப்பிட்டவர்கள் கூட தோல்வியைக் கண்டு, சற்று சோர்வுற்றிருக்கலாம். ஆனால், சிலந்தி தோல்வியைக் கண்டு சோர்வுற்று தன் முயற்சியிலிருந்து பின் வாங்கியதாக சரித்திரம் ஏதும் இல்லை. தோல்விகளைப் பெரிய மலைகளாக எண்ணாமல், அதனை மண் மேடுகளாகப் பார்க்க வேண்டும். அப்போதுதான் தோல்வியின் சுமை நம்மை அழுத்தாது. தோல்வியை ஏற்றுக்கொண்டு முயன்றால் வெற்றி நிச்சயம், அதுவே வேத சத்தியம். “முன் வைத்த காலைப் பின் வைப்பதில்லை. வெற்றிக்கு முன்னர் ஓய்வென்பதில்லை” என்று செயல்படு. வெற்றி மாலை உனதாகும்.

இறுதியாக, ‘தோல்வியே வெற்றியின் முதற்படி’ எனும் பழமொழியின் விளக்கத்தை நாம் நன்குப் புரிந்து கொண்டு தோல்வியை மனதார ஏற்றுக் கொண்டு, வெற்றியை நோக்கிப் பீடுநடை போடக் கற்றுக் கொள்ள வேண்டும். இறைவன் படைப்பில் இன்றியமையாத நாம் நினைத்தால் எதுவும் சாத்தியமே!

No comments:

Post a Comment