Tuesday, April 30, 2013

பைக் மெக்கானிக் தல அஜித்தின் அசல் பக்கங்கள்

அவரது சில சில "அசல்" பக்கங்கள்..

பைக் மெக்கானிக்: சென்னை அசன் மெமோரியல் பள்ளியில் படிக்கும்போதே, பைக்குகள் என்றால் தீராத காதல். பள்ளி வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு 'பகுதி நேர' பைக் மெக்கானிக் ஆக பணிபுரிந்தார் அஜித்.

பைக் ரேஸ்:1990 இல 110 சி.சி மோட்டார் பைக் பிரிவுக்கான "இந்தியன் நேஷனல் சாம்பியன் ஷிப்" போட்டியில் கலந்து கொண்டார் அஜித். அப்போது அவரது வயது 19.

கார்மெண்ட்ஸ் தொழில்: அதன் பின்னர், ஈரோட்டில் துணிகள் ஏற்றுமதி செய்தார் அஜித். இதற்க்காக தனியாக ஒரு ஏஜென்சி ஒன்றை நடத்திவந்தார்.

மாடலிங்: ஏற்றுமதி தொழிலில் இருந்த அஜித், தனது நண்பர்களின் ஆலோசனைபடி கூடுதல் வருமானத்திற்கு, மாடலிங் செய்ய தொடங்கினார்.

சினிமா: இத்தனையும் அவர் செய்தது அவரது 21 வயதுக்குள். மாடலிங் அவரது சினிமா பிரவேசத்திற்கு அடிக்கல் ஆனது. பிரேம புஸ்தகம் என்ற தெலுங்கு படம்தான் அவரது முதல் சினிமா. இரண்டாவது படம்தான் தமிழில் வந்த அமராவதி. ஆசை, காதல் கோட்டை போன்ற பெரும் வெற்றி படங்கள் மூலமாக ஒரு காதல் நாயகனாக உருவான அஜித், வாலி மூலமாக தான் ஒரு மிக சிறந்த நடிகர் என்று நிரூபித்தார். 'தீனா' - அஜித்தை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத, ஒரு முன்னனி நடிகர் ஆக்கியது.

ஏற்ற,இறக்கங்கள் நிறைந்தது அஜித்தின் சினிமா பயணம். இடையே ஒரு விபத்தில் பாதிக்கபட்டது காரணமாக அவரால் சினிமாவில் முழு கவனம் செலுத்த முடியாததும் ஒரு காரணம். அதன் பின்னர், ரஜினி அவர்களின் ஆசியோடு 'பில்லா'வில் மீண்டும் எழுச்சி பெற்ற அஜித்துக்கு அதன் பின் வந்த 'ஏகன்',
அசல் என்று ஒரு சிறு சறுக்கல்.

அஜித் தற்சமயம் நடித்து வரும் 50 வது படமான "மங்காத்தா" ' அதிக எதிர்பார்ப்புக்கள் உள்ள படமாக பேசப்பட்டு வருகிறது.

கார் ரேஸ்: 2003 இல ஆசிய அளவிலான 'பி.எம்.டபிள்யு சாம்பியன்ஷிப்' என்ற கார் பந்தயத்தில் கலந்து கொண்டு, நான்காம் இடத்தை பிடித்தார் அஜித்.

2004 இல 'பிரிட்டிஷ் பார்முலா - 3 ' ரேசில் கலந்துகொண்டு, இரண்டு சுற்றுகளில் மூன்றாம் இடத்திற்கு வந்தார். இந்த ரேசில் முதல் இடம் வந்த நெல்சன் பிக்வெட், இன்றைய பார்முலா பந்தயங்களில் முதல் இடத்தில் இருக்கிறார்.

ஏரோநாட்டிக்ஸ் : நமது இந்திய சினிமா நடிகர்களில் விமானம் ஓட்டதெரிந்த ஒரு சில நடிகர்களில் அஜித்தும் ஒருவர்.

தற்சமயம் 'ரேடியோ கன்ட்ரோல் பைலட்ஸ் அசோசியஷன்' என்ற நிறுவனத்தை தொடங்கி, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்ட முறையில் ஒரு 'ஹெலிகாப்டரை' உருவாக்கி கொண்டு இருக்கிறார்.

ஜேப்பியார் கல்லூரி மாணவர்களுக்கு ஏரோநாட்டிக்ஸ் சம்பந்தமாக செயல்விளக்கம் அளித்து இருக்கிறார் அஜித்.

அஜித்துக்கு சமிபத்தில் விமானம் ஓட்டும் பைலட் லைசென்ஸ் கிடைத்து இருக்கிறது. இந்தியாவில் இந்த லைசென்ஸ் பெற்ற நடிகர் இவர் ஒருவரே.

சமையல் கலை: அஜித்துக்கு சகல சமையலும் அத்துப்படி. 'பில்லா' படபிடிப்பு மலேசியாவில் நடந்தபோது, யூனிட்க்காரர்களுக்கு ஒரு நாள் இவரே சமைத்து, பரிமாறியும் இருக்கிறார்.

ஆன்மிகம்: "இதுவே என் கடைசி பிறவியாக இருக்கவேண்டும்" என்று தத்துவார்த்தமாக கூறும் அஜித் தீவிர சாய்பாபா பக்தர். திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நடைபயணம் செல்லும் வழக்கம் உடையவர். புனே போன்ற வட மாநிலங்களில் இருக்கும் ஆஷ்ரமங்களுக்கு செல்லும் வழக்கமும் உடையவர். அதேசமயம், திருவனந்தபுரத்தில் இருக்கும் ஒரு தர்காவுக்கும் செல்கிறார் அஜித்.

"அஜித்தான் எனது ரோல் மாடல்" என்று சொல்கிறார் சென்னையை சேர்ந்த பிரபல "பைக் ரேசர்" சரத்குமார். "அஜித் என்னுடைய பைக்கைதான் "ரேசில்" கலந்துகொள்ள பயன்படுத்தினார்" என்று சொல்கிறார் அகில இந்திய அளவில் புகழ் பெற்ற பெண் பைக் சாம்பியன் அலிஷா அப்துல்லா.

"பணக்கார,ஏழை விளையாட்டுன்னு தரம் பிரிக்காதிங்க. எந்த விளையாட்டுக்கும் பணம் மூலதனமா இருக்கமுடியாது. கடின உழைப்பு மட்டும்தான் இருக்கமுடியும். அது என்கிட்ட இருக்குன்னு பெருமையா சொல்லிக்கிறேன்" என்று பேசும் அஜித், தன்னம்பிக்கைக்கு ஒரு உதாரணமாய் சுட்டிகாட்ட வேண்டியவர்தானே?

"எல்லாரும் ஒரு வாழ்க்கை இருக்கு. அதில் முட்டி முன்னேறி வெற்றிபெறனும்.சாதிக்கணும். இதுதான் என் ஒவ்வொரு நாள் கனவா இருந்தது. இருந்துகிட்டு இருக்கு" என்று கூறும் அஜித் நிஜமாகவே ஒரு அல்டிமேட் ஸ்டார்தான்.

மே 1 - அவரது பிறந்த நாளன்று, 'தல' ரசிகர்களுக்கு அவரது பிறந்த நாள் பரிசாக "மங்காத்தா" வெளிவருவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. தற்சமயம் ஜூன் அல்லது ஜூலைக்கு படத்தின் ரீலீஸ் தள்ளிபோயிருக்கிறது.

"எனது படங்களுக்கு ரசிகர்கள் தரும் வரவேற்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால், இதற்க்கு நான் தகுதியானவன்தானா என நானே யோசிக்கறேன்" என்கிறார் அஜித்.
அந்த தன்னடக்கம்தான் "தல".

"நான் என்றுமே ரசிகர்களை எனது சுயநலத்திற்காக பயன்படுத்தியதில்லை. எனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்காக அவர்களை கேடயமாக பயன்படுத்திக் கொண்டதும் இல்லை, பயன்படுத்தவும் மாட்டேன். சமுதாய நல பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக தங்களது குடும்பத்திற்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே நான் வலியுறுத்தி வருகிறேன்.

வருகிற மே 1ம் தேதி என்னுடைய நாற்பதாவது பிறந்த நாளில் எனது கருத்தை எனது முடிவாக அறிவிக்கிறேன். இன்று முதல் எனது த‌லைமையின் ‌கீழ் கட்டுப்பட்டு வந்த அஜித்குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன்.

மாறிவரும் காலகட்டத்தில் ‌பொதுமக்கள், எல்லோரையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு திரைப்படத்திற்கு அப்பாற்பட்டு ‌பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே ஒரு நடிகனுக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு கவுரவம் கிட்டும் என்பதே என் நம்பிக்கை. அந்த கவுரவமும் எனது இந்த முடிவிற்கு ஆதரவு அளிக்கும். எனது உண்மையான ரசிகர்களின் கருத்து மட்டுமே எனது பிறந்த நாள் பரிசாகும் "

ஊருக்கு ஊர் ரசிகர் மன்றங்களை திறந்து, அப்படியே கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிக்கவேண்டும் என்பதே அன்று வந்த நடிகர்கள் முதல் இன்று வந்த நடிகர்களின் "லட்சியமாக" இருக்கிறது.

ஆனால், இப்படிப்பட்ட சினிமா நடிகர்களுக்கு மத்தியில்,"ரசிகர் மன்றங்கள் கலைப்பு" என்று எந்த ஒரு நடிகரும் யோசிக்க கூட தங்குகிற ஒரு விஷயத்தை, தனது பிறந்த நாள் அன்று அறிவித்து இருக்கிறார் அஜித்.

அஜித்துக்கு ரசிகராக இருப்பதே பெருமை.'தல' தலதான்.

No comments:

Post a Comment